PAGEVIEWERS

பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்!-vikatan.om



தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.
* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது.

எனவே எந்த இயக்குனரும் ஓய்வு பெறுவதற்குள் ஒரு நாளாவது பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பதவி வகித்து விட துடிப்பார்கள். இதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை பிடிப்பதில் மற்ற இயக்குனர்களுக்குள் கடும் போட்டி நிலவும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வைகைச்செல்வன் இருந்தபோது பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்தவர் தேவராஜன். அவரை அரசு தேர்வுத்துறைக்கு மாற்றிவிட்டு தனது செல்வாக்கு மூலம் ஜூனியரான ராமேஸ்வர முருகனை கொண்டுவந்தார். அப்போதே அது சர்ச்சையானது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவின் ஆதரவால் அவற்றை சமாளித்தார் ராமேஸ்வர முருகன்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த 1991ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது முதல்வர் அலுவலக துணைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றினார். அதனால் ஜெயலலிதாவிடம் சபீதாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்போது முதல்வர் அலுவலகத்தில் உள்ள செயலாளரான ராம் மோகன் ராவிடம் சபீதாவுக்கு நிறைய செல்வாக்கு உண்டு. அதனால் பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சரவை விட செயலாளர் சபீதாவுக்குத்தான் செல்வாக்கு அதிகம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்த வரை சபீதா வைத்ததுதான் சட்டம்.
சபீதாவை பகைத்து கொண்டால் அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பள்ளிக்கல்வி அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச்செல்வன் ஆகியோர் இந்த காரணத்தினால்தான் தங்களது பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு 5வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வீரமணி பதவி ஏற்றார்.
* அமைச்சர் தரப்பினர் அத்துமீறல்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வீரமணி பதவியேற்றாலும் வழக்கம் போல் செயலாளர் சபீதாவை அணுசரித்து போக வேண்டிய கட்டாயம். இதனால் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அமைச்சர் என்ன சொன்னாலும் செயலாளர் சபீதாவை கேட்காமல் அதில் விருப்பம் காட்டாமாட்டார் ராமேஸ்வர முருகன். இதற்கிடையே அமைச்சர் வீரமணியின் தரப்பினர் ஆசிரியர் டிரான்ஸ்பர், மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகங்களில் உட்கார்ந்து கொண்டு எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைக்க தொடங்கினர்.
'எம்' லிஸ்ட்- 'எஸ்' லிஸ்ட்
வழக்கமாக ஆசிரியர்கள் பொது மாறுதல்கள் மே மாதம் நடக்கும். இதற்காக கவுன்சலிங் நடத்தப்படும். ஆனால் ஆளும் கட்சியினர் தலையீடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடந்த ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங்கில் காலிப்பணியிடங்களில் 60 சதவீதம் மறைக்கப்பட்டன. ‘ எம் ’ லிஸ்ட் என்று சொல்லப்படும் அமைச்சர் தரப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கும், ‘ எஸ் லிஸ்ட் ’ என்று குறிப்பிடப்படும் செயலாளர் தரப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கும் டிரான்ஸ்பர்கள் வழங்கப்பட்டன.
* கான்ட்ராக்ட்க்கு விடப்பட்ட ஆசிரியர் டிரான்ஸ்பர்:
திமுக ஆட்சியில் திரைமறைவில் நடந்த ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரம் இப்போதைய ஆட்சியில் கூவி கூவி வியாபாரம் செய்யும் அளவுக்கு மாறிப்போனது. மதுரைக்கு 5 லட்சம், திருநெல்வேலிக்கு 7 லட்சம் என்று ரேட் நிர்ணயம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான டிரான்ஸ்பர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மூலம் போடப்பட்டது.
இதில் உச்சகட்டமாக அமைச்சர் தரப்பு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10 கோடி வாங்கிக் கொண்டு ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை கான்ட்ராக்ட்டுக்கு விட்ட கொடுமை பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே நடக்காதது.
* நடு ராத்திரியில் இயங்கிய இயக்குனரகம்:
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் ராமேஸ்வரமுருகன் தலைமையில் நடு ராத்திரி 12 மணி வரை கூட இயங்கியது. எல்லாம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் விவகாரங்கள்தான். வழக்கமாக ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் புரோக்கர்கள் உண்டு. ஆனால் ராமேஸ்வரமுருகனின் பணிக்காலத்தில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆசிரியர் டிரான்ஸ்பர்கள் வியாபாரம் சூடு பிடித்து மீன் கடை வியாபாரம் போல் ஆனது.
இதை விட கொடுமை இயக்குனர் ராமேஸ்வரமுருகனின் மனைவியே காலையில் இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் டிரான்ஸ்பர், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் விவகாரங்களை கவனிக்க தொடங்கினார் என்கிறார்கள்.
* அமைச்சருக்கே அல்வா
அமைச்சர் வீரமணி தரப்பில் கடந்த 3 மாதம் முன்பு தென்மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, துத்து க்குடி பகுதிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்டு லிஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இடங்களில் காலியிடங்கள் இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து “நோ ”சொல்லியிருக் கின்றனர். ஆனால் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட 20 நாட்களில் இயக்குனர் அலுவலகத்தில் ராத்திரியோடு ராத்திரியாக அவசர அவசரமாக 3 ஆயிரம் டிரான்ஸ்பர்கள் பழைய தேதி குறிப்பிட்டு டிரான்ஸ்பர் ஆர்டர் வழங்கப்பட்டுள்ள தகவல் அமைச்சர் தரப்புக்கு சென்றது.
* அமைச்சர் & பள்ளிக்கல்வி செயலாளர் மோதல்:
இதை ஆளும்கட்சியினர் ஆதராப் பூர்வமாக அமைச்சர் வீரமணியிடம் எடுத்து கொடுத்துள்ளனர். செயலாளர் சபீதாவை அழைத்த அமைச்சர் வீரமணி என்னிடம் காலியிடங்கள் இல்லை என்று சொல்லி விட்டு இப்போது மட்டும் எப்படி அந்த இடங்களில் டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டிருக்கிறார்கள் உங்கள் அதிகாரிகள் என்று கேட்க... சபீதாவோ 'உங்க கட்சிக்காரங்க தேவையில்லாமல் ஏன் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வரம்பு மீறுகின்றனர்' என்று பதிலுக்கு கடுகடுப்பு காட்ட மோதல் உண்டானது.
* முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பஞ்சாயத்து:
இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமைச்சர் வீரமணி இந்த விவகாரத்தை சொன்னாராம். இதையடுத்து விசாரணை நடத்தியதில் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரனிடம் தொடங்கி செயலாளர் சபீதா, முதல்வர் அலுவலக பி.ஆர்.ஓ., சரவணன் வரை சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பி.ஆர்.ஓ., சரவணன் மட்டும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 200 ஆசிரியர் டிரான்ஸ்பர்கள் வாங்கியிருந்தாராம். இதையடுத்து அவசர அவசரமாக பி.ஆர்.ஓ. சரவணன் நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட்டார்.
* ராமேஸ்வர முருகனுக்கு அல்வா கொடுத்த சூப்பிரண்ட்டுகள்:
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை கவனித்து வந்த சூப்பிரண்ட்டுகள் முரளி, ரவி, கார்த்தி உள்பட 5 பேர் தனித்தனியாக ஆசிரியர்களிடம் டிரான்ஸ்பருக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ‘ எம்’., லிஸ்ட்டில் அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்களையும் சேர்த்து டிரான்ஸ்பர் ஆர்டர்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். இதன் மூலமே இவர்கள் தலா 2 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர் என்பதும் இந்த பிரச்னைக்கு பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. பிறகென்ன உடனடியாக 5 பேரும் டிரான்ஸ்பர். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனை மாற்றியே ஆக வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பிடிவாதம் பிடிக்க விவகாரம் கார்டன் வரை சென்றது. இதையடுத்து ராமேஸ்வர முருகன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் வீரமணியின் சிபாரிசின் பேரில் மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கிடையாது: செயலாளர் அறிவிப்பு:
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இப்படி மாணவர் நலன் கருதி முழு பரீட்சை முடியும் வரை ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்தில் இருந்து அறிவிப்பு வந்தது இல்லை. இதை வெளியிடும்படி சபீதாவே நேரடியாக பத்திரிகையாளர்களை கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு இந்த 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம் பள்ளிக்கல்வித்துறையை கலங்கடிக்கச் செய்துவிட்டது.
விவகாரம் முடிந்தது மாதிரி தெரியவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்த போது இந்த டிரான்ஸ்பர்கள் போடப்பட்டதால் இப்போது விசுவரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. உளவுப்பிரிவு போலீசார் இதை விசாரிக்க தொடங்கியுள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக ஆடி கார் வாங்கி கொடுத்ததும். புரோக்கர்கள் சிலர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து கொடுத்தது. சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலம் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ரிஜிஸ்தர் ஆகியிருப்பது என்று ஏகப்பட்ட விசயங்கள் ஒவ்வொன்றாக விசாரணையில் வெளியாக தொடங்கியிருக்கின்றன.
* பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா விரைவில் மாற்றம்:
அமைச்சர்களோடு தொடர் மோதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வராதது என செயலாளர் சபீதா மீது மேலிடத்தில் பெயர் ரிப்பேராகி இருக்கிறதாம். அதோடு 3 ஆயிரம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் விவகாரமும் இதில் சேர்ந்து கொள்ள பிரச்னையிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டாராம். ஆனால் கிடைக்கவில்லை என்கிறார்கள். அதனால் அப்செட் ஆன சபீதா தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கும் விரைவில் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்று சொல்லி புலம்பி வருகிறாராம்.
* கண்காணிப்பில் டிபிஐ வளாகம்:
சென்னை நுங்கம்பாக்கம் ரோட்டில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில்தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உள்பட எல்லா இயக்குனரகங்களும் உள்ளன. 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரத்துக்கு பிறகு ஒவ்வொரு இயக்குனர் அலுவலகத்திலும் என்னென்ன மோசடிகள் நடந்திருக்கின்றன என்று விசாரணை நடத்தும்படி மேலிடத்து உத்தரவாம். அதனால் உளவுப்பிரிவு போலீசார் ஒவ்வொரு அலுவலகத்திலும் புகுந்து தேவையான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு இயக்குனர்களும் ஏ.சி. அறையிலும் வியர்த்த முகத்துடன் உட்கார்ந்திருக்கிறார்களாம்.
* கிடப்பில் கிடக்கும் மாணவர் நலன் திட்டங்கள்:
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரம் மட்டும்தான் நடக்கிறதா? மாணவர்கள் நலன், கல்வித்தரம் என்று உருப்படியாக எதுவும் நடக்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதை சொல்லா விட்டால் சாமி குத்தமாகி விடாது.
இதோ... பிற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இலவச லேப்டாப், இலவச சைக்களில் உள்பட 14 மாணவர்களுக்காக 14 நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர கடந்த 2011ல் ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார். பயோ மெட்ரிக் முறையிலான அந்த கார்டில் மாணவர் பெயர், அவரது ரத்த குரூப், பள்ளி வருகை, குடும்ப உறுப்பினர்கள் விபரம் உள்பட எல்லா விபரங்களும் புதிய தொழில் நுட்பத்தில் அடங்கியிருக்கும். சுருக்கமாக சொன்னால் அந்த கார்டை வைத்து அந்த மாணவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று சொல்லி விடலாம்.
அந்த அளவுக்கு பயனுள்ள அந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப் படும். இதற்காக மாநில அரசு ரூ.500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு அப்படியேதான் இருக்கிறது.
அது போல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்குவதற்கு 4 ஆயிரத்து 500 மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 40 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு கம்ப்யூட்டர் லேப் ஆரம்பிக்கப்படும். அங்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்கப்படும் என்று இதற்காக ரூ.350 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்தார்.
இது தவிர ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வித் துறையின் அக்கறையின்மையால் அந்த அறிவிப்புகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலப்பதோடு சரி. நடைமுறைக்கு வருவதில்லை. கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் 750 தொடக்க பள்ளிகள் நடு நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் போதிய நிதி ஒதுக்கீடும், வரைவு திட்டத்தை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பாததால் அதில் 300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. ஏன் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது. நவீன காலத்துக்கு ஏற்ப பாடத்திட்டம் இல்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இந்த கல்வியாண்டு அதை அமல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. புதிய பாடத்திட்டமும் ரெடி பள்ளிக்கல்வி செயலாளரின் அனுமதி கிடைக்காததால் இந்த ஆண்டு அதை அமல்படுத்தப்படவில்லை. இப்படி பள்ளிக்கல்வித்துறையில் கிடப்பில் உள்ள திட்டங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இனிமேலாவது அதிகாரிகள் திருந்தி ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களில் கவனத்தை செலுத்துவதை விட மாணவர் நலன், கல்வி தரம் பற்றி யோசித்து செயல்பட்டால் மட்டுமே பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
அரசு கவனம் கொள்ளுமா?
-எம்.கார்த்தி

No comments:

Post a Comment